ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்: மோகினி டே போட்ட பதிவு

Web Ads

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர் என கூறியுள்ள மோகினி டேயின் பதிவு விவரம் வருமாறு:

ரகுமானும், அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து,
பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின.

ரகுமானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்டர்சை பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துடன் தொடர்புபடுத்தி, வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோகினி டே.

இந்நிலையில், இது குறித்து மோகினி டே மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவும், வீடியோவும் இணைத்துள்ளார். அதில் அவர், ‘எனக்கும், ஏ.ஆர். ரகுமானுக்கும் எதிராக அடிப்படையே இல்லாத யூகங்கள், தவறான தகவல்கள் பெருமளவில் வெளியாவதை என்னால் நம்பவே இயலவில்லை.

நான் எனது சிறு வயதிலிருந்தே ரகுமானின் படங்கள், அவரது இசை டூர்களில் பணியாற்றியுள்ளேன். அந்த 8.5 ஆண்டு பயணத்தை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

ஆனால், இதுபோன்ற உணர்வுப்பூர்மான விஷயங்களில் பொதுமக்கள் எவ்வித மரியாதை, பரிவு மற்றும் அனுதாபம் இல்லாமல் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். சில ஊடகங்கள் இந்த இரு சம்பவங்களையும் கொச்சைப்படுத்தியது குற்றச்செயல் எனக் கருதுகிறேன்.

ரகுமான் எனக்குத் தந்தையைப் போன்றவர். என் வாழ்வில் எனக்கு நிறைய ரோல் மாடல்கள், தந்தைக்கு நிகரான அன்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பணி நிமித்தமான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். எனது தந்தை இசையில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். அவர் கடந்த ஆண்டு மறைந்தார். ரஞ்சிபரோட் தான் என்னை இந்த இசைத் துறையில் அறிமுகப்படுத்தினார்.

லூயி பாங்ஸ் என்னை செதுக்கினார். ஏ.ஆர். ரகுமான் அவரது இசை நிகழ்ச்சியில் நான் மிளிர எனக்கு சுதந்திரம் தந்தார். அவரது ரெக்கார்டிங் செசன்களிலும் அவரது இசைக் கோப்புகளிலும் எனக்கு சுதந்திரம் தந்தார். அந்தத் தருணங்கள் மகத்தானவை. அவற்றை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.

சில வதந்திகள் ஒருவரின் மனதில், வாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பரபரப்புச் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அறிவதில்லை. கொஞ்சமேனும் உணர்வோடு நடந்து கொள்ளுங்கள். நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இவை என் நாட்களில் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை. தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கவும்’ என தெரிவித்துள்ளார்.