குஜராத் விமான விபத்தைத் தொடர்ந்து, விமானப் பயணம் மற்றும் விபத்து குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது:
FLIGHT FRIGHT! விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்த காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம்.
இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் காதுகளுக்கு வரவில்லை என்றாலும் அங்கும் இங்குமாய் விமான விபத்துகள் உலகம் முழுக்க நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
2023-ல் 182 விபத்துகளும், 2024-ல் 258-ம் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சிறிய விபத்திலிருந்து உயிரிழைப்பை ஏற்படுத்துகிற பெரிய விபத்துகள் வரை எல்லாமே அடக்கம். ஒன்றிரண்டு மணி நேர உள்நாட்டுப் பயணங்களில் விமானப் பயண அச்சம் பெரிதாக இருப்பதில்லை.
ஆனால், வெளிநாட்டுப் பயணம் என்றால் அது வேறு மனநிலைதான். விமானத்தில் ஏறி அமர்ந்து பறக்கத் தொடங்கும் வரை இதைக் குறித்த எண்ணம் வராத ஆளே கிடையாது. எல்லார் மனதிலும் ஒரு கீற்று போல இந்த எண்ணம் வந்துபோகும்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு: அடிக்கடி பறப்பவர் ஒரு துணிவை வரழைத்துக்கொள்வதும், அவ்வப்போது பறப்பவர் கொஞ்சம் அச்சத்தோடு அதை மறக்க முயல்வதும், புதிதாய் பறப்பவர் இறங்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உறங்க முடியாமல் தவிப்பதும் அன்றாடம் நடப்பவை. உங்கள் அனுபவத்தில் நீண்ட விமானப்பயணத்தில் உங்கள் மன ஓட்டம் பொதுவாக எப்படியிருக்கும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.