சுந்தர்.சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ பட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். இறுதியாக ரவி அரசு கதையில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இப்படத்தின் தயாரிப்புக்காக பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இது விஷால் நடிப்பில் உருவாகும் 35-வது படமாகும். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 99-வது படமாகும்.
ரவி அரசு இயக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டராக ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக துரைராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.
இப்படத்தில் விஷாலுக்கு நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார். மேலும் தம்பி ராமையா, அர்ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதர கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் கார்த்தி கலந்துகொண்டு, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் இதன் பூஜை நடைபெற்றது. தமிழ் திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 100-வது படமாகும். இப்படம் பிரமாண்டமாக உருவாகும் என கூறப்படுகிறது. இயக்குநர் மற்றும் ஹீரோ யார் என்பதும் எதிர்பார்க்க வைத்துள்ளது.