பேய்கள் பற்றிய பயத்தால் தூங்கவேயில்லை: நடிகை கஜோல் அனுபவம்

தமிழ் சினிமாவில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் கஜோல் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கஜோல் பாலிவுட்டில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மா’ படத்தில் நடித்துள்ளார். விஷால் பியூரியா இயக்கி இருக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது, கஜோலிடம் எப்போதாவது படப்பிடிப்பில் அமானுஷ்யத்தை அனுபவித்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது
அதற்கு கஜோல் பதிலளிக்கையில், ”நான் அதை பலமுறை அனுபவித்திருக்கிறேன். அதனால், இரவு முழுவதும் தூங்காமலும் இருந்திருக்கிறேன். அங்கிருந்து எப்படியாவது போய்விட்டால் நன்றாக இருக்கும் என்றும் உணர்ந்திருக்கிறேன்.
அதற்கு ஒரு நல்ல உதாரணம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோஸ். இது உலகின் மிகவும் அமானுஷ்யமான இடங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், அங்கு எதையும் (பேய்களை) பார்க்காதது என்னுடைய அதிர்ஷ்டம்’ என்றார்.
கஜோலின் இந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மேலும் ரசிகர்கள், ‘இன்றைய டிரெண்டில் மின்சாரக் கனவு-2 உருவானால் நன்றாக இருக்கும்’ எனவும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

