போதைப்பொருள் பயன்படுத்தினேன்: போலீஸில் வில்லன் நடிகர் ஒப்புதல்

ஜிகர்தண்டா பிளஸ், குட் பேட் அக்லி போன்ற படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போலீஸார் விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில்,

போதைப் பொருளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விடுவேன். இந்த விற்பனையாளர்களின் அடையாளங்கள், பரிவர்த்தனையான தேதிகள் எனக்கு நினைவில் இல்லை.

மெத்தம்பேட்டமைனை முகர்ந்து பார்த்துள்ளேன். எப்போதாவது கஞ்சா புகைப்பேன். குறிப்பாக யாராவது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்தால் புகைப்பேன்’ என கூறியுள்ளார்.

நாங்கள் ஹோட்டலுக்கு வரும்போது அறையிலிருந்து திடீரென வெளியேறியது ஏன் என போலீஸார் கேட்டதற்கு, ‘ எனது தந்தை சம்பந்தப்பட்ட நிதி தகராறில் தொடர்புடையவர்கள், என்னைத் தாக்க வருவதாக நினைத்தே அங்கிருந்து பயந்து ஓடினேன். முன்பு எனது தந்தை ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தின் லாபத்தை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது’ எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகை வின்சி அலோஷியஸ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, நகைச்சுவையான தொனியில் சில கருத்துகளை மட்டுமே அவர் கூறியுள்ளார். மேலும், அவரிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பு தளங்களில் உள் குழுக்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்களை தனிப்பட்ட முறையில் நான் சந்தித்ததில்லை’ என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

actor shine tom chacko admits to drug use