நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை பற்றி தவறான தகவல்: போலீஸில் புகார்
நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், தனுஷ்க்கு ஜப்பானில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், தற்போது நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில்,
‘நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன்.
எங்களது நிறுவனத் தலைவர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் குறித்தும், அவரின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் பல தவறான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இது நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது.
இதுபோன்று உண்மைக்கு புறம்பாக, தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் தாங்கள் தயவு கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும், தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்சயா ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் இத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.