காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, நித்யாமேனன் மனம் திறந்த பேச்சு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் நாளை ரிலீஸாகிறது. இதையொட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் குறித்து நித்யா மேனன் மனம் திறந்து தெரிவிக்கையில்,
‘எனக்கு மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, வேலைக்குச் சென்ற என் அம்மாவின் மகப்பேறு விடுப்பு முடிந்தது. பாட்டியின் மடியில் என்னைப் போட்டுவிட்டு அம்மா வேலைக்குச் சென்றார். பாட்டியே அம்மாவின் இடத்தை நிரப்பினார்.
சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி. கூட்டத்தில் சேர முடியவில்லை. நண்பர்கள் இருந்தாலும் தனியாகவே இருப்பேன். அன்றிலிருந்தே நான் மற்றவர்களை விட வித்தியாசமானவள்.
ஒரு வயதுக்கு வந்ததும் எனக்கும் காதல் அனுபவம் கிடைத்தது. ஒவ்வொரு அனுபவமும் வலியையே தந்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறை என் இதயம் உடைந்து போனது. அந்த நேரத்தில் எனக்கு ஒரு ஆத்ம துணை வேண்டும், அவருடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால், அப்படிப்பட்ட ஒருவர் எனக்குக் கிடைக்கவே இல்லை.
இப்போது அந்த எல்லா உணர்வுகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன். தனியாக மாதக்கணக்கில் பயணம் செய்கிறேன். என் வேலைகளை நானே செய்கிறேன். சில சமயங்களில் மாதக்கணக்கில் எதுவும் செய்யாமல் இருந்து விடுவேன். அது என்னை நானே அறிந்துகொள்ளும் ஒரு செயல்முறையாக இருக்கும். என்னுள் மறைந்திருக்கும் அனைத்தும் அப்போது வெளிப்படும்.
நான் ஆன்மீகப் பாதையைப் பின்பற்றுகிறேன். வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு இந்தப் பாதையில் பதில் கிடைத்துள்ளது. பொருள் சார்ந்த எதிலும் எனக்கு ஆர்வம் இல்லை. நடிப்பு என் தொழில். அதனால்தான் இங்கே இருக்கிறேன். ஆனால், இதற்கே அடிமையாகவில்லை. சினிமா மீது மோகமும் இல்லை.
வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் வாழவில்லை. ஆத்ம துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ரத்தன் டாடாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுபோல, நானும் தனிமையை மிகவும் ரசிக்கிறேன்’ என கூறியுள்ளார்.
