விஜய் நடிப்பில் இலங்கை அகதி பற்றிய ஆக்சன் கதை: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.
முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வித்தியாசமான பாணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்ததாக ‘மதராஸி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கின்றார்.
விஜய்யை வைத்து முதல்முறையாக ‘துப்பாக்கி’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்த முதல் விஜய் படம் என்ற பெருமையை பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து ‘கத்தி’ என்ற படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்தனர். இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார். அந்த கதையை பற்றி தான் தற்போது மதராஸி ப்ரோமோஷனில் பேசியிருக்கிறார் முருகதாஸ்.
விஜய்யை வைத்து எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லாத ஒரு படத்தை பண்ண முருகதாஸ் முடிவெடுத்திருக்கிறார். இலங்கை அகதியை பற்றிய ஒரு கதை அது. முழுக்க முழுக்க ஒரு ட்ராவல் படமாக அது இருக்கும். இந்தியா, கனடா, தாய்லாந்து என உலகம் முழுக்க அப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.
சண்டைக்காட்சியே இல்லாத ஒரு ஆக்சன் படம். விஜய் லுங்கி மற்றும் ஷர்ட்டில் தான் வருவார். ஆனால், விஜய் அந்த சமயத்தில் அரசியல் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியதால் ‘சர்க்கார்’ படத்தை எடுத்தேன் என்றார் ஏ.ஆர். முருகதாஸ். சர்க்கார் படத்திற்கு பிறகும், விஜய்யும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் கூட்டணி மீண்டும் இணையாமல் போனது.
