கமல் ‘உலக நாயகன்’ பட்டம் துறந்ததற்கு காரணம் என்ன? எஸ்.வி.சேகர் கருத்து

பால பருவம் முதல் தற்போது தக் ஃலைப் வரை பல்வேறு படங்களில் நடித்த கமல்ஹாசன், உலக நாயகன் பட்டம் வேண்டாம் என திடீரென அறிவிப்பை வெளியிட்டு இருப்பதற்கு பின்னணியில் என்ன நடந்திருக்கும்? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இத்தகைய பட்டங்கள் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் தனது கருத்தை கூறியுள்ளார். அது குறித்து பார்ப்போம்..
அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் படித்து வரும் கமல்ஹாசன், இனிமேல் தன்னை ‘உலக நாயகன்’ என அழைக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில், மாணவராக படிக்கச் சென்ற இடத்தில், திடீரென இப்படியொரு எண்ணம் அவருக்கு தோன்ற என்ன காரணம் என்றும், அவருக்கு ஏதாவது மனம் சங்கடப்படும் விஷயம் நடந்ததா? அல்லது இந்த பட்டங்களின் மீதான ஈர்ப்பு போய் விட்டதா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.
புரட்சித்தலைவர் என்கிற பட்டத்துடன் எம்ஜிஆர் நடித்து வந்தார். நடிகர் திலகம் என சிவாஜி கொண்டாடப்பட்டார்.
ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பெரிய விமர்சனமே எழுந்தது. தளபதி பட்டத்துடன் விஜய் தொடர்கிறார். லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாராவும், மக்கள் செல்வனாக விஜய் சேதுபதியும் மாஸ் காட்டி வருகின்றனர்.
ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்படும் இந்த பட்டங்களை ஒரு காலம் வரை அனுபவிக்கும் நடிகர்கள், அதன் பின்னர் சில காரணங்களுக்காக வேண்டாம் என துறக்க முடிவு செய்கின்றனர்.
நடிகர் எஸ்.வி. சேகரிடம் உலக நாயகன் பட்டத்தை கமல்ஹாசன் துறந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,
‘அந்த முடிவு சரியான முடிவு தான். பட்டம் இருந்தால் தான் அவர் கமல்ஹாசனா? 4 வயதில் நடிக்கும் போது அவருக்கு உலக நாயகன் பட்டம் இருந்ததா?
பட்டம் என்பது தலைமேல் கனமாகவே இருக்கும். அதை அவர் துறக்க முடிவு செய்தது சரியான ஒன்று தான்.
எனக்கும் நாடக சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பட்டங்கள் கொடுத்தனர். ஆனால், எஸ்.வி. சேகர் என்கிற பெயரே போதும் என அப்பவே முடிவு செய்து விட்டேன் என்றார்.
கிரேஸி மோகன் என நான் பட்டம் வச்சிருக்கேன். நீ கிரேஸி சேகராக மாறிடுறியான்னு கிரேஸி மோகன் கேட்டார். ஆனால், அதெல்லாம் எதுக்குப்பான்னு சொல்லிட்டேன்.
கமல்ஹாசன் செய்த சாதனைகள் தான் காலத்துக்கும் அவர் புகழை பாடும். அவரும் நானும் 50 ஆண்டுகால நண்பர்கள்.
இந்திய சினிமாவுக்கு முதல் முறையாக டால்பி ஆடியோ சிஸ்டம் கொண்டு வந்தது அவர் தான். மேக்கப்பில் புதிய விஷயம் உலகளவில் இருந்தால், அதை இங்கே கொண்டு வருவதும் அவர்தான். இந்த பட்டமெல்லாம் அவருக்கு தேவையே இல்லை’ என்றார்.
ஆம், கொடுக்கும் பட்டத்தை விட, மக்கள் மனங்களில் நிறைந்திருப்பதுதானே மேலானது.

