Web Ads

சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் கார்த்தி.

தற்போது, தந்தை சிவகுமாருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ, அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியமாய் வகுத்துக் கொண்டவர்.

ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.

சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளை விட, அவரது வாழ்வியல் விழுமியங்களே என் வாழ்க்கைகளையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன.

சிவகுமார் மகன் என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம், என் வாழ்நாளுக்கான அங்கீகாரம். எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்த தருணத்தில் ஓவியர் சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரனுக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

இருவருக்கும் மகத்தான கெளவரத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும் இச்சிறப்பை முன்னின்று வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும் எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

the son of sivakumar is my identity says surya
the son of sivakumar is my identity says surya