முதல்ல கார்த்தி படம், அப்புறம்தான் சிவகார்த்திகேயன்: லோகேஷுக்கு ஃபேன்ஸ் கோரிக்கை

‘கைதி-2’ படத்தை விரைவில் தொடங்கக் கூறி ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிப் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையை மையமாக வைத்து, ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து விட்டார்.

பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் செம ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம்- 2, லியோ என மாஸ் இயக்குனராக உயர்ந்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தேவா என்கிற கதாபாத்திரத்தில், கேங் ஸ்டாராக ரஜினி நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில், லோகேஷ் ‘கூலி’ படத்தின் ப்ரீ புரோடக்சன் பணிகளை கவனித்துக் கொண்டே, தனது அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்ததோடு இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோ மற்றும் ஹீரோயின் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வகையில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இது குறித்து, கார்த்தி ரசிகர்கள், முதல்ல, கைதி-2 பட ஷுட்டிங்கை ஸ்டார்ட் பண்ணுங்க லோகேஷ் சார்..’ என அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.