முன்னணி நடிகருக்கு மர்மநபர் கத்திக்குத்து, உயிருக்கு போராடும் நிலை; போலீஸ் தீவிர விசாரணை..

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு நேர்ந்த கத்துக்குத்து காரணமாக, லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த சம்பவம் வருமாறு:
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில், அதிகாலை வேளையில் கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்ததோடு, சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மும்பை பந்த்ரா போலீஸார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில், பல குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர்.
கொள்ளையன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சயிப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘சயிப் அலிகான் 6 இடங்களில் காயங்களுடன் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு காயங்கள் மிகவும் கடுமையானவை.
காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அதனால், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே சயிப் அலிகான் உடல்நிலை குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
ஒரு முன்னணி நடிகருக்கு, உயிரைப் பறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்து சம்பவம் இந்திய திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
