பயணிகள் விமானத்தில் ரஜினி திடீர் விசிட்: மகிழ்ச்சியில், பொதுமக்கள் ஆரவாரம்
‘நிலை உயரும்போது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்’ என்பது எடுத்துக்காட்டானவர் சூப்பர் ஸ்டார். அவ்வகையில், ஒரு பரபரப்பு நிகழ்வு காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் அவரது போர்ஷன் முடிவடைந்தது. தற்போது, நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்-2’ பட ஷூட் கோவை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தற்போதைய ஷூட் முடிந்து, தனி விமானத்தில் செல்லாமல் இயல்பாக அனைவரும் பயணிக்கும் விமானத்திற்குள் ரஜினி வந்ததை பார்த்த சக பயணிகள் தலைவா, தலைவா என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
தன்னை பார்த்ததும் சந்தோஷப்பட்ட அனைவரையும் பார்த்து, சிரித்தபடி கையசைத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.
ரஜினியிடம் இல்லாத பணம் இல்லை. அவர் நினைத்தால், தனி விமானம் மூலம் பயணம் செய்திருக்கலாம். அப்படி இருக்கும்போது, எகானமி வகுப்பில் ரஜினியை பார்த்தவர்களோ, ‘பணம், பெயர், புகழ் வந்தாலும் தலைக்கு ஏறவிடாமல் எளிமையாக இருப்பது எப்படி என்பதை சூப்பர் ஸ்டாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள்.
ரஜினி இப்படி எகானமி வகுப்பில் பயணம் செய்தது, முதல் முறை அல்ல. முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடப்பாவில் இருந்து கிளம்பியபோது எகானமி வகுப்பில் தான் பயணம் செய்தார்.
அவர் தனக்கு தோன்றும்போதெல்லாம் எகானமி வகுப்பில் கேஷுவலாக பயணம் செய்வது வழக்கம். ரஜினி இப்படி திடீரென்று எகானமி வகுப்பில் வந்த வீடியோவை பார்த்தவர்கள் அவரை பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்கிறார்கள்.
ரஜினி திடீர் விசிட் கொடுத்தது இந்த வாரத்தில் இது 2-வது முறை. முன்னதாக ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றபோது வழியில் கோவிலை பார்த்ததும், இறங்கிச் சென்று சாமி தரிசனம் செய்தார். ரஜினி வந்ததை எதிர்பார்க்காதவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் விமானத்தில் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. தங்கக் கடத்தலின் பின்னணியில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.