தணிக்கைத் துறைக்கு, பா.ரஞ்சித்-மாரி செல்வராஜ் கடும் கண்டனம்..

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு சிக்கல் தொடர்பாக திரையுலகினர் பலரும் தணிக்கை துறையினரை கடுமையாக சாடி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.

அதேபோல, ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு நிகழ்ந்திருப்பது என்பது தணிக்கைத் துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது.

மேலும், மாற்றுக் குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத் தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இதுபோன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத் துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்’ என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத் துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

’ஜனநாயகன்’ விவகாரம் தொடர்பான வழக்கு அடுத்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 21-ம் தேதி வரவுள்ளது. இதனிடையே, முதலில் அளித்த தீர்ப்பை முன்வைத்து ‘ஜனநாயகன்’ தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கும் என தெரிகிறது. ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும், படம் எப்போது வெளியீடு என்பது இதுவரை அனைவருக்குமே தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

personal political comments on the jananayagan issue
personal political comments on the jananayagan issue