‘மனுஷி’ திரைப்படத்தை நீதிபதி பார்த்தார்: வெற்றிமாறன் தகவல்..
நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி வரவேற்பு பெற்றார் கோபி நயினார்.
இதனையடுத்து, இவரது இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான இப்படம் தணிக்கையில் சிக்கியது. இது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வெற்றிமாறன். இதனால் நீதிபதிக்கு தனியாக ‘மனுஷி’ திரையிடல் நடைபெற்றது.
தற்போது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு உயநீதிமன்ற நீதிபதி திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தார். அவரோடு இணைந்து தணிக்கைக் குழுவினர் உள்ளிட்டவர்களும் அமர்ந்து படம் பார்த்தார்கள்.
படம் முடிந்தவுடன் இரண்டு தரப்பும் அவர்களது பரிந்துரைகள் குறித்து பேசினார்கள். அது உண்மையில் அரிதானதாக இருந்தது. முதலில் தணிக்கைக் குழுவினர் படத்தில் 36 இடங்களை நீக்க பரிந்துரை செய்தார்கள். அதனை நீதிபதி ஆய்வு செய்து மீண்டும் தணிக்கை குழுவினருடன் பேசி 12 இடங்களை மட்டும் கட் செய்ய பரிந்துரை செய்தார்.
இறுதியாக ‘மனுஷி’ படத்துக்கு U/A 6+ என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறோம். ‘மாஸ்க்’ படத்தின் வெளியீட்டுப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ‘மனுஷி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

