‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்சினைக்கு வாக்காளர்கள்தான் காரணம்: நடிகர் ஜேசன் கருத்து..
விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் அதற்கு யு/ஏ 16+ சான்று கொடுத்து சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தது சென்சார் போர்டு. பின்னர் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது என சான்று கொடுப்பதை நிறுத்தியது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு தரப்பு. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷாவோ ஜனநாயகன் படத்திற்கு உடனே யு/ஏ சான்று வழங்க வேண்டும் என்றும், தணிக்கை குழுவின் மறுஆய்வு உத்தரவை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு வந்ததுமே மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியவில்லை.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது ஜனநயாகன் குழு. அதை பார்த்த தணிக்கை வாரியமோ தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கும் ஜேசன் ஷா தெரிவிக்கையில், ‘ஜனவரி 9-ம்தேதி ஜனநாயகன் வருகிறது என்று சந்தோஷமாக இருந்தேன். சென்சார் சான்று விஷயத்தில் நடக்கும் அனைத்தும் எனக்கு சரியாக தெரியாது. சான்று வழங்கும் முறை எனக்கு முழுவதுமாக புரியவில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால் மதம் மற்றும் அரசியலுக்கு படங்களுடன் தொடர்பு இருக்கிறது. ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என யாருக்கு ஓட்டு போடுகிறோமோ அடுத்து என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உங்களின் வாக்குகள் தான் இது போன்ற முடிவுகளுக்கு காரணம்.
பேச்சு சுதந்திரம் தொழில்நுட்பத்துடன் சேரும்போது டெட்லி காம்போவாகிறது. ஒரு நடிகர் என்பது பொது ஆள், மக்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். அது பிடிக்காவிட்டால் நடிகராகக் கூடாது. பல நடிகர்கள் பணம், புகழ் உள்ளிட்ட நல்ல விஷயங்களை பார்க்கிறார்கள். ஆனால், தலை முதல் கால் வரை வரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மக்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் மனதில் பட்டதை சொல்வார்கள்’ என கூறியுள்ளார்.
