விஜய் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது: ஹெச்.ராஜா அதிரடி பதிவு
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை மேற்கோள் காட்டி ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவு பற்றிக் காண்போம்..
மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்வோம் என உறுதிபட கூறி வருகிறது.
‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இட்டால் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம்’ என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், 40 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை விமர்சித்து தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
‘நடிகரும் தவெக தலைவருமான திரு.விஜய் அவர்கள் ‘வேட்டைக்காரன்’ என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில், தனது மகன் திரு.ஜேஸன் சஞ்சய் அவர்களோடு நடனமாடி இருப்பார்.
அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று, ‘ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும், நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்’ என்று பாடுவார்.
‘தமிழக மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்’ என்று தன் மகனோடு நடனமாடி பாடிய அவர்தான், தன் மகன் திரு.ஜேஸன் சஞ்சய் அவர்களை தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழிக் கல்வி போதிக்கும் சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
‘ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ என்று பாடி இருக்கிறாரே தவெக தலைவர் விஜய் அவர்கள். அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல, அவருடைய மகன் திரு.ஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை.
அவர் மகனை மும்மொழிக் கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு, அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழிக் கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.