ரசிகர்கள் என்னை மறக்கவில்லை: நடிகை ஜெனிலியா செம குஷி..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படம் ரிலீஸான 24 நாட்களில் ரூ.155 கோடி வசூல் செய்திருக்கிறது. அவருக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், அமீர்கான் படத்தில் அவர் நடித்தது பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு காண்போம்..
ஜெனிலியாவின் கணவரான நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை தற்செயலாக பார்த்திருக்கிறார் அமீர்கான். உடனே அவரை அணுகி உங்கள் மனைவி ஜெனிலியா தற்போதும் படங்களில் நடிக்கிறாரா? என கேட்டிருக்கிறார். ஆமாம்ஜி என கூறியிருக்கிறார் ரித்தேஷ்.
சரி, ஜெனிலியாவை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னாவை சந்திக்கச் சொல்ல முடியுமா ரித்தேஷ்? என கேட்டிருக்கிறார் அமீர்கான். இதையடுத்து, ஜெனிலியாவிடம் ரித்தேஷ் விஷயத்தை சொல்ல, அவர் ஆர்.எஸ். பிரசன்னாவை சந்தித்துப் பேசியதுடன் ஆடிஷனிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள்தான் சரியான ஆள் ஜெனி என அவரைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், முறைப்படி ஆடிஷனில் கலந்துகொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ஜெனிலியா.
இதில், ஜெனிலியாவுக்கு என்ன சந்தோஷம் என்றால், கடந்த 10 ஆண்டுகளாக அவர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. திரையுலக நண்பர்களுக்காக ஓரிரு படங்களில் கவுரவத் தோற்றத்தில் மட்டுமே வந்தார்.
மக்கள் தன்னை மறந்திருப்பார்கள் என ஜெனிலியா நினைத்த நிலையில், யாருமே மறக்கவில்லை என்பது அவரை மிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அடிக்கடி படங்களில் நடிங்க ஹாசினி’ என தமிழ் ரசிகர்களும் விருப்பத்தை தெரிவித்து வருவது தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, மோகன்ராஜா இயக்கி வெளியான ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ஜெனிலியா, ‘ஹாசினி’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
