மணிரத்னம் இயக்கிய படம் ரீரிலீஸ் ஆனால், தியேட்டர்கள் எரியும்: ராஜீவ் மேனன் கருத்து
மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் ஜுன் மாதம் வெளியாகிறது என்பது தெரிந்ததே. இச்சூழலில், அவர் முன்னதாக இயக்கிய ‘பம்பாய்’ படம் ரீரிலீஸானால் வரவேற்பு எப்படி இருக்கும்? இது பற்றிய தகவல்கள் காண்போம்..
1995-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் ‘பம்பாய்’ திரைப்படம் இயக்கியிருந்தார். இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் தெரிவிக்கையில், ‘பம்பாய் போன்ற ஒரு படம் தற்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும். அந்த அளவிற்கு சகிப்புத்தன்மையற்ற நாடாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் முன்பு போன்ற சாதாரண சூழல் தற்போது நீடிக்கவில்லை. மதம் மிகப்பெரிய சக்தியாக மாறிவிட்டது. அது ஒரு பிரச்னைக்குரிய இடமாக மாறியிருக்கிறது. இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இந்தியாவில் முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை. சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. இதனை கண்டிப்பாக கூற முடியும். பம்பாய் படம் தற்போது வெளியானால், நான் சொன்ன நிகழ்வு நடக்கும்’ என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ பாடல் உருவான விதம் குறித்து பேசிய ராஜீவ் மேனன், ‘எனது அப்பா பணிபுரிந்த கடற்படையில் அவரது நண்பர்கள் இருந்ததால், இப்பாடலை எடுக்க உதவியாக இருந்தது. இப்போது அதுபோன்ற பாடலை எடுப்பது கடினம். உயிரே உயிரே பாடலில் ஒரே இடத்தில் நாயகன் இருப்பார். அவரது காதலை புரிந்து கொண்டு, நாயகி தேடி ஓடி வர வேண்டும்.
இதில், மற்றொரு சுவாரஸ்யமானது என்னவென்றால், மனிஷா கொய்ராலாவின் நீல நிற உடைதான். இந்த பாடல் இன்னும் சிறப்பாக அமைவதற்கு காரணமாக இருந்தது’ என கூறினார்.
ஆக, இன்றைய சூழலில் கில்லி, சச்சின் போன்ற படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதுபோல, பம்பாய் படம் ரீரிலீஸ் செய்யப்பட்டால்.? என்ற கேள்விக்குறியுடன் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருவது சிந்திக்கத்தக்கது.