நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..
‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன்.
என் கிளையன்ட் பற்றி மீடியாவில் மோசமாக கருத்து வலம் வருவது குறித்து தான் இந்த நோட்டீஸ். மாநில அரசியலில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்று மோசமாக பேசுவார் என்று என் கிளையன்ட் எதிர்பார்க்கவே இல்லை.
என் கிளையன்ட்டுக்கு எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பு இல்லை. மேலும், கட்சியில் தொடர்புபடுத்திக்கொள்ளும் எண்ணமும் இல்லை. அரசியல் விவகாரத்தில் முன்பு போன்றே தற்போதும் என் கிளையன்ட் நடுநிலையுடன் இருக்கிறார்.
என் கிளையன்ட்டை அவரின் கலைக்காக தானே அறியப்பட வேண்டுமே தவிர, எந்த அரசியல் விவகாரத்திற்காக இல்லை. அதிலும் குறிப்பாக பர்சனல் லைஃப் பற்றி பொதுவெளியில் விவாதம் செய்யக் கூடாது. உயர் பதவியில் உள்ளவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என் கிளையன்ட்டுக்கு தொடர்பே இல்லாத விஷயங்களில் அவரின் பெயரை இழுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
