‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வசூல்: படக்குழுவினர் மகிழ்ச்சி..

பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சில சமயம் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களைவிட, புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகின்றன. கதைதான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம், வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழக வசூலில், இதுவரை ஒட்டுமொத்த வசூலில் 20 கோடியை கடந்திருக்கிறது. இதன் மூலம் ஷேர் தொகையாக 10 கோடியை தொட்டுள்ளது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இந்த வசூல் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால், இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை முன்னதாகவே படக்குழு விற்றுவிட்டது.2025-ம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படங்கள் பட்டியலில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ இடம்பெறும் என கணிக்கப்படுகிறது.
கலையரசன் தங்கவேல் இயக்கிய இப்படத்தில் மாளவிகா மனோஜ், ஷீலா, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், இயக்குநர் வெங்கடேஷ் உள்பட பலர் ரியோ ராஜ் உடன் நடித்திருந்தனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தினை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் தமிழக உரிமையை பெற்று வெளியிட்டது ஏஜிஸ் நிறுவனம்.
