யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும் உருவாகி வருகிறது.
சசிகுமாருடன் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மாண்டமான கற்பனையை திரையில் உயிர்ப்பிக்க அனைத்து துறைகளும் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளன.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது VFX உள்ளிட்ட பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் காட்சித் தரத்தையும், கதையின் தாக்கத்தையும் மேலும் உயர்த்தும் வகையில் VFX பணிகள் சிறப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பிற முக்கிய அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
