நான் காப்புரிமை கேட்பதில்லை: இசையமைப்பாளர் தேவா பேச்சு..

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா தெரிவிக்கையில், ‘நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த ‘கரு கரு கருப்பாயி’ பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னைக் காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை’ என கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் தேவா இசையில் வெளியான ‘கரு கரு கருப்பாயி’ பாடல் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த பாடல் யூடியூப், இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டது. அதேபோல ‘வாழை’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் ‘பஞ்சுமிட்டாய் சேலைகட்டி’ பாடலும் பயன்படுத்தப்பட்டு வைரலானது.
இதேபோல், அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் இடம்பெற்று வரவேற்பு பெற்றது. இந்த பாடல் வித்யாசாகர் இசையில் புஷ்பவனம் குப்புசாமி-சுவர்ணலதா குரல்களில் உருவானது குறிப்பிடத்தக்கது.

