‘தப்புணா.. நீங்க இப்படி சொல்லக்கூடாதுணா’ என்ற வாசகம் வைரல்: விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்வு..

நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம்ணா. ஆனா, சொல்லை கொட்டினால் எப்டி? புரியலையா… தொடர்ந்து வாசிங்க புரியும்..
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இது, சினிமா துறையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில், அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மறைமுகமாக விமர்சித்தும் வந்தனர்.
குறிப்பாக, விஜய் இன்னும் களத்திற்கு வரவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவில்லை என பல விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதேநேரத்தில், பல நடிகர்கள் தங்களது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அரசியலுக்கு வந்து இன்றும் கரைசேர முடியாமலும், திரும்பிப் போக முடியாமலும் உள்ளனர்.
ஆனால், வெகு சிலர் மட்டுமே தங்களது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக ஆக்கிக் காட்டியவர்கள். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட இவர்களுக்கு முன்னரும் பின்னரும் கட்சி தொடங்கிய பலர் இன்றுவரை கரைசேராமல் உள்ளனர். தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில தசாப்தங்களாகவே மாறிவிட்டது.
குறிப்பாக, நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் கொள்கைகள் என்ன? அவர்களின் கள செயல்பாடு எப்படி உள்ளது என்பதையெல்லாம் நன்கு கவனித்துதான் வாக்கு செலுத்துகின்றனர்.
அப்படி இருக்கும்போது, நடிகர் விஜய்யின் கன்னிப்பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது. பலரும் அவரது பேச்சு குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவரது எக்ஸ் பக்கத்தில்,
‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.முடிவு? பாப்போம்..’ என குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போஸ் வெங்கட் சூர்யாவை அரசியலுக்கு வரச்சொல்லிப் பேசினார். ஆனால், விஜய்யின் முதல் அரசியல் கன்னிப்பேச்சு குறித்து போஸ் வெங்கட் விமர்சனம் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், போஸ் வெங்கட்டின் எக்ஸ் பக்கப் பதிவுக்கு ஆர்.ஜே.வும் நடிகருமான ரமேஷ் திலக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது போஸ் வெங்கட்டின் பதிவினை ஷேர் செய்த ரமேஷ் திலக், “தப்புணா.. நீங்க இப்படி சொல்ல கூடாதுணா” என பதிவிட்டுள்ளார்.
ரமேஷ் திலக்கின் பதிவு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மணியோ பிணியோ, எதை விதைத்தோமோ அதுதானே அறுவடையாகும்!
