விலங்கு வெப்சீரிஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு… ‘வாரண்ட்’ டீசர் வெளியீடு!

Web Ads

தமிழ் ZEE5 தனது புதிய ஒரிஜினல் தொடரான “வாரண்ட்” தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 22, 2026 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடர், வேரூன்றிய மற்றும் யதார்த்தமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இந்த தொடரின் மூலம் “விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் C.S. இசையமைத்துள்ள இந்த தொடரில், ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்விலும் பிரசாந்த் பாண்டியராஜ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேலும் பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ் மற்றும் சாயா தேவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“வாரண்ட்” தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் பின்னணியில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. இரண்டாம் நிலை காவலரான “கோட்டை கருப்புசாமி” என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை, பயம், அவமானம் மற்றும் அதிகாரத்தின் அழுத்தங்கள் எவ்வாறு அவரின் செயல்களை மாற்றுகின்றன என்பதை இந்த தொடர் ஆழமாக சித்தரிக்கிறது. அதே நேரத்தில், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மங்கலான கோட்டையும் கேள்விக்குறியாக்குகிறது.

இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், “கோட்டை கருப்புசாமி ஒரு வழக்கமான ஹீரோ அல்ல. மிகவும் மனிதத் தன்மை கொண்ட, குறைகளுடன் வாழும் ஒரு மனிதர். அந்த உண்மைதான் என்னை இந்த கதாபாத்திரத்தை ஏற்க தூண்டியது. ‘வாரண்ட்’ தொடரில் நடித்த அனுபவம், நான் கேமரா பின்னால் ஆராய்ந்த உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது” என்றார்.

மேலும், “இந்த கதையை அதன் இயல்பான வடிவத்தில் சொல்ல ZEE5 முழு சுதந்திரத்தையும் அளித்தது. பார்வையாளர்கள் இந்த தொடரை வெறும் பார்ப்பதற்காக அல்ல, உணர்வதற்காக நினைவில் வைத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

போலீஸ் அமைப்பின் மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த விறுவிறுப்பான தொடர், வரும் மே 22 முதல் தமிழ் ZEE5 தளத்தில் வெளியாகிறது.