விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட கிளைமாக்ஸ் முடிந்ததும் ‘பிரியாவிடை’ சீன்ஸ்?
விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த ‘சிங்கிள்’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல்-சேட்டிலைட் உரிமைகள் பெரிய அளவில் விற்பனையாகி உள்ளன. தற்போது இப்படத்தின் வெளியீடு தொடர்பாக, தமிழக வியாபார உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஜனநாயகன்’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து ஹெச்.வினோத்திடம் சில தகவல்களை கூறியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளும் முடிவடைய உள்ளன.
இதையடுத்து, படத்தில் கிளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு எமோஷனலான எடிட் வீடியோவை படத்தில் சேர்க்கலாமா? என ஹெச்.வினோத் உட்பட படக்குழுவினர் திட்டமிட்டனர்.
அதாவது ‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விடைபெறுவதால், அதற்கான ஒரு ஸ்பெஷலான எடிட்டை கிளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன் போடலாமா என வினோத் யோசித்திருக்கிறார். இந்த ஐடியாவை விஜய்யிடமும் கூறியிருக்கிறார். ஆனால் விஜய், ‘இதெல்லாம் வேண்டாம்’ என சொல்லிவிட்டார்.
தன் ரசிகர்கள் படம் பார்த்து முடித்துவிட்டு சந்தோஷமாக போக வேண்டும். இப்படியொரு ‘எடிட்’ போட்டால் ரசிகர்கள் கண்டிப்பாக எமோஷனலாகி விடுவார்கள். எனவே, இது வேண்டாம் என விஜய் சொன்னதாகவும், கிளைமாக்ஸ் காட்சி முடிந்து ரசிகர்கள் சந்தோஷமாக வீடு திரும்ப வேண்டும். அதற்கு எதாவது யோசிங்க என விஜய் இன்புட்ஸ் கொடுத்ததாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் கண்டிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன் ஏதேனும் ஒரு விஷயத்தை படக்குழுவினர் சேர்த்திருப்பார்கள் என்றே ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். அது எமோஷனலாக இல்லாமல், சந்தோஷமாய் விடை பெறுதலாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. அதாவது ‘ நீ நதிபோல ஓடிக்கொண்டிரு.. எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும்.. உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே’ என்ற பாடல் போல.! பொறுத்திருந்து பார்ப்போம்.

