எல்கேஜி பசங்க சண்டை போடுற மாதிரி இருக்கு: தவெக தலைவர் விஜய் சாடல்

‘இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ’ என விஜய் பேசியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசுகையில், தவெக 2-ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தில் ஸ்தம்பித்தது.
அரசியல்னாலே வேறலெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என கணிக்கவே முடியாது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை. ஆனால், மக்களுக்கு ரொம்ப பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்ல முறையில் வரவேற்பார்கள்.
நம்ம கட்சி வளர்ந்தால் ஒரு சில பேருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். இது வரைக்கும் நாம சொன்ன பொய்யெல்லாம் நம்பிட்டு ஓட்டு போட்டுட்டு இருந்தாங்களே. இவன் வேற மக்களுக்கு நெருக்கமாகிட்டு இருக்கான். இவனை எப்படி குளோஸ் பண்ணலாம்னு கன்பியூசன் வரும்.
அதனால் என்ன பண்ணுவது என தெரியாமல், வர்றவன் போறாவனெல்லாம் கட்சி ஆரம்பிப்பான்னு சொல்லி பேச ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்ட அரசியல் களத்தில் பயமின்றி வருகிற எதிர்ப்புகளை எல்லாம் லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிட்டு 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
ஒரு கட்சி ஆலமரமாய் வளர அதற்கான அடிப்படை சரியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் ஒரு புகார் வந்தது. நம்முடைய கட்சியில் எல்லாரும் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன. அண்ணா கட்சி ஆரம்பித்தபோதும், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதும் அவர்கள் பின்னால் இருந்தது இளைஞர்கள் தான்.
அதே மாதிரி நம்முடைய கட்சியினர் எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களாம். இருந்தால் என்ன. முன்பெல்லாம் பண்ணையாராக இருந்தவர்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால், இப்போ நிலைமை மாறிவிட்டது.
தற்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார் ஆகிவிட்டார்கள். நாட்டோட நலனை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் பணம் பணம்னு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்ற வேண்டும்.
பெரிய பெரிய கட்சிகளுக்கு பூத் ஏஜெண்ட்கள் தான் பலம். நம்முடைய கட்சிக்கு பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். அன்றைக்கு தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்ததில்லை என்று.
இப்போ புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள். மும்மொழிக் கொள்கை என்று. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால், கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இதைப் பார்த்தால் எல்கேஜி பசங்க சண்டை போட்டுக்கிற மாதிரி இருக்கு.
இந்த ஃபாசிசமும், பாயாசமும், அதாங்க நம்ம அரசியல் எனிமியும் கொள்கை எனிமியும், பேசி வைத்துக் கொண்டு, மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள். இவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம். அதை மக்கள் நம்ப வேண்டுமாம். இது ரொம்ப தப்பு புரோ. இதற்கு இடையே நம்ம பசங்க ஸ்லீப்பர் செல் மாதிரி வந்து TVK for TN னு டிரெண்ட் பண்ணிட்டாங்க.
நம்ம ஊரு சுயமரியாதைக்கான ஊரு. நம்ம எல்லா மொழியையும் மதிப்போம் அதற்கான மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி, வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி விடுவது.
அதனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மும்மொழிக் கொள்கைகளை உறுதியாக எதிர்ப்போம். தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்’ என விஜய் முழங்கினார்.
இந்நிலையில், ‘அரசியல்னாலே வேற லெவல்தான். யார் யாரை எதிர்ப்பார்கள்? ஆதரிப்பார்கள்? என்பதை கணிக்கவே முடியாது’ என விஜய் குறிப்பிட்டுள்ளது, வருகிற சட்டமன்றத் தேர்தலையும் மனதில் வைத்துத்தான் என பார்க்கப்படுகிறது.
