எனது பள்ளிக் காலங்கள்: ரஜினி பகிர்ந்த நினைவலைகள்..
எவருக்கும் மறக்க முடியாதது பள்ளிக் காலங்கள். அது அழகான வண்ணங்கோலங்கள். மிக பசுமையானது. அதில், ரஜினி சாரின் நினைவலைகள் இங்கே பார்ப்போம்..
கர்நாடக மாநிலம் பசவனகுடியில் இருக்கும் ஏபிஎஸ் (Acharya Patashala School) பள்ளியில் படித்தார் ரஜினிகாந்த். அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. அந்த நேரத்தில் பாங்காக்கில் இருந்ததால் ரஜினியால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தான் படித்த பள்ளி குறித்து கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் அந்த வீடியோ வைரலாகி விட்டது. பள்ளி பற்றி ரஜினி கூறியதாவது,
ஏ.பி.எஸ். பள்ளியில் சேர்வதற்கு முன்பு நான் கன்னட மீடியம் பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியில் நான் கிளாஸ் டாப்பர். நான் 98 சதவீத மதிப்பெண் எடுத்த நிலையில், உயர்நிலை பள்ளிக்காக என் அண்ணன் என்னை ஆங்கில மீடிய பள்ளியான ஏ.பி.எஸ். இல் சேர்த்துவிட்டார். கன்னட மீடியம் பள்ளியில் முதல் பெஞ்ச் மாணவனாக இருந்த நான் ஆங்கில மீடிய பள்ளியில் கடைசி பெஞ்ச் மாணவன் ஆனேன்.
இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்கள் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதிலும் அந்த பாடங்களை ஆங்கிலத்தில் படிக்க ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் ஆசிரியர்களின் உதவியால் ஆங்கிலத்தில் படித்தேன்.
மதிப்பெண்கள் குறைந்த போதிலும் ஏ.பி.எஸ். கல்லூரியில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டில் கல்லூரியில் இருந்து விலகினேன். நான் வகுப்பறையில் பட காட்சிகளை நடித்துக் காட்டினேன். அதை பார்த்த என் ஆசிரியர்கள் என்னை நாடகங்களில் நடிக்க ஊக்குவித்தார்கள். அது தான் நான் நடிகனாக போடப்பட்ட அடித்தளம்’ என்றார்.
ரஜினிகாந்த் பேசியதை கேட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் கூறியிருப்பதாவது, ‘தலைவரே.. நீங்கள் சொல்வது எங்களுக்கு நன்றாக புரிகிறது. தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு உயர் நிலை பள்ளி மற்றும் கல்லூரியில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதற்குள் உயிரே போகிறது. அதிலும் ஆரம்பத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்று இருக்கிறது. கோர்வையாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. வாழ்க்கையே கஷ்டமாக தெரிகிறது என்கிறார்கள்.
தமிழ் வழிக்கல்வி கற்ற பலர் ஆங்கில பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து கிளாஸ் டாப்பராகவும் செய்திருக்கிறார்கள். விடாமுயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே’ என அந்த கிளாஸ் டாப்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
