இளையராஜாவுக்கு அரசின் சார்பில் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிம்பொனி சாதனை படைத்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில் விழா சிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள்..
இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை கடந்த 8+ம் தேதி லண்டனில் அரங்கேற்றினார். இவரது சிம்பொனியை காண, பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் குழுமினார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் படையே புறப்பட்டுச் சென்றது.
இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜாவை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று நன்றி தெரிவித்தார் இளையராஜா. அப்போது லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தனது சிம்பொனி குறித்து ஆர்வமாக பேசினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என பதிவிட்டுள்ளார்.
இது இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த அரசு விழா இசைஞானியின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

