புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஆராய தமிழக அரசு இரண்டு நிபுணர் குழுக்களை உருவாக்கி உள்ளது.
Tamil Nadu Action on New Education Policy : மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் 80 வருடங்களாக பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்தி மொழியை பயில முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் இது புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக என்னென்ன உள்ளன? எவையெல்லாம் தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய தமிழ்நாடு அரசு இரண்டு நிபுணர் குழுக்களை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தலைமைச்செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.