தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி வசூல் சாதனை எப்படி?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வரும் 5-ந்தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றார்.
இந்நிலையில், பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் என தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எளிதாக செய்து வருகின்றது. எப்படி, காரணம் என்ன? என்பது குறித்து சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில்,
‘தெலுங்கில் தயாரிப்பாளர்கள் ஒரு கன்டன்ட்டை நம்பிவிட்டார்கள் என்றால், செலவு செய்ய தயங்கமாட்டார்கள். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நம்பிக்கையாக செலவு செய்து படத்தை பிரம்மாண்டமாக எடுப்பார்கள். அதன் காரணமாகதான் தெலுங்கு படங்கள் அதிகமாக ஆயிரம் கோடி வசூல் செய்யும் படங்களாக இருக்கின்றன’ என்றார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் அதே சமயத்தில் சில எதிர்மறை விமர்சனங்களும் வருகின்றன.
‘தெலுங்கு படங்களில் பிரம்மாண்டத்திற்கு குறையே இருக்காது. அதுமட்டுமல்லாமல், ப்ரோமோஷனுக்காகவே பல கோடி செலவு செய்வார்கள். படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வார்கள்.
ஆனால், கோலிவுட்டில் தமிழ் ரசிகர்களுக்காகவே படங்களை எடுக்கின்றனர். தமிழ் சினிமா ரசிகர்கள் திருப்தியடைந்தால் போதும் என்ற மனநிலையில் தான் அவர்கள் படம் எடுக்கின்றனர். அதனால்தான் தமிழில் இதுவரை ஆயிரம் கோடி வசூல் சாதனை படங்கள் வரவில்லை’ எனவும் பலதரப்பட்ட விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து தற்போது வைரலாகி பரவுகிறது.
தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் சாதனை படம் என்பது தற்போது வரை கனவாகவே இருந்து வருகின்றது. சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான ‘கூலி’ படம் எதிர்பார்த்தவாறு ஆயிரம் கோடி வசூலை பெற தவறிவிட்டது.
அடுத்ததாக, விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்து வெளியாகும் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தையும்.!

