‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பாக, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு..

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வெளியீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது’ என்ற கருத்தை கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சையானது. இதனால் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் படத்தின் வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரையரங்குகளுக்கு முன்பாகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கமல்ஹாசன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது படத்தை வெளியிட அரசு, காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது எனவும், திரையரங்குகளில் படம் தங்கு தடையின்றி வெளியாகவும், போதுமான பாதுகாப்பு வழங்கவும் கோரியுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசனின் மனுவில்,
‘அரசு, காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட தடை விதிக்கக் கூடாது. திரையரங்குகளில் படம் தங்கு தடையின்றி வெளியாகவும், போதுமான பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை. மாநில காவல்துறை தலைவர் மற்றும் நகர காவல் ஆணையருக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள தீர்ப்பை பொறுத்தே கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ ரிலீஸாகுமா? ரிலீஸாகாதா? என்பது தெரிய வரும்.
