jallikattu issue : தென்காசி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை ஆதரித்து ராஜபாளையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது, யாருடைய கூட்டணி ஆட்சியில், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என கூறினார்.
மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை என்று திமுக மீது குற்றம் சாட்டினர்.
அதோடு ‘தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் திமுகவினர் தான்’ என தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
மேலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை இருந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது” என பெருமையுடன் கூறினார்.
அதிமுக அரசில் பெண் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதுவரை 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, 15 லட்சம் குடிசை வீடுகள் தற்போது கணக்கெடுப்பு நடந்துள்ளது, விரைவில் அவை அனைத்தும் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும் என உறுதியளித்தார். இவ்வாறு பிரச்சாரத்தில் பேசினார்.