நான் ஒரு முழுமையான நடிகர் அல்ல: அஸ்வின் விளக்கம்..

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’ விமர்சனரீதியாக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ப்ரியா பவானி ஷங்கர், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், சஞ்சனா திவாரி மற்றும் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்பட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இச்சூழலில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஸ்வினிடம் ஒருவர், ‘நீங்கள் கதை கேட்கும் போது இப்போதும் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்களா? அல்லது முழித்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான அஸ்வின் கோபமாக பேசுகையில், ‘
நான் நேர்மையாக ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் பதில் கூறுவீர்களா? அப்போது நான் நாற்பது கதைகள் என பொதுவாக ஒரு எண்ணிக்கையை தான் சொன்னேன். அதற்கு அதிகமாகவும் கூட நான் கதைகள் கேட்டு இருக்கலாம். இன்னைக்கு நீங்கள் அத்தனை கதைகளை கேட்டு தூங்காமல் இருப்பீர்களா? நான் திரையரங்குகளில் பார்க்கும்போதே பலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
நான் அப்போது யாரையும் புண்படுத்த வேண்டுமென பேசவில்லை. அப்போது பேசியதற்கான விளக்கத்தையும் அந்த சமயத்திலே கொடுத்து இருந்தேன். இப்போது படத்துக்காக வரும்போது நீங்க என்னை குத்துறதுக்காகவே இதை கேட்குறீங்க. நான் ஒரு முழுமையான நடிகர் என்று சொல்ல மாட்டேன். இப்போது நான் கற்றுக்கொண்டு தான் இருக்கேன்.
நான் பணியாற்றும் அத்தனை இயக்குனர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கற்று வருகிறேன். நல்ல நடிகன் ஆவதற்கு முயற்சி செய்கிறேன்’ என்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் வாயிலாக ஹீரோவானார் அஸ்வின். அந்த படத்துடைய செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ‘எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு தூங்கி இருக்கிறேன்.
நான் தூங்காமல் கேட்ட கதை என்றால் என்ன சொல்ல போகிறாய் படத்துடைய கதை தான் என பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு ஏகப்பட்ட சர்ச்சைகளையும், ட்ரோல்களையும் உண்டாக்கியது. பின்னர், இது குறித்து விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இது பற்றி கேள்வி எழுப்புவது சரியில்லை என ரசிகர்கள் அஸ்வினுக்கு இணையத்தில் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
