விஷால் உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்ட மேனேஜர் ஹரிகிருஷ்ணன்
விஷால் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் அவரது மேனேஜர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவருக்கு கை உதறலும் ,பேச்சில் தடுமாற்றமும் இருந்தது. இதனால் பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். அதன் பிறகு அப்போலோ நிறுவனம் அவருக்கு வைரஸ் ஃபீவர் என்ற அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
ஆனால் அதனை யாரும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதனால் அவரது மேனேஜரான V.ஹரிகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,
கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும் மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான எங்கள் தலைவர் திரு.விஷால் அவர்களின் உடல் நிலை குறித்து பலர் பல்வேறு அவதூறுகளையும் தங்களுக்கு தோன்றிய கதைகளையும், கற்பனைகளையும் ஊடகங்கள் என்ற பெயரால் விளம்பரம் தேடி வரும் ஒரு சில விஷம எண்ணம் கொண்ட நபர்களால் பொய்யான செய்தியை மட்டும் பரப்பி வருகின்றனர்.
தற்போது இதனை எழுதும் நோக்கம் அவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, மாறாக இவ்வளவு பொய்களையும், வதந்திகளும் பரப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் எங்கள் தலைவர் திரு.விஷால் அவர்கள் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்கள், மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
திரு.விஷால் அவர்களுக்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும்
“ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்” நம்பிக்கைமிக்க நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருகின்றனர்கள் அவர்களை எப்போதும் மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு கோமாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அவர்களுக்கு எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை அதே வேளையில் இன்று எங்கள் தலைவர் திரு.விஷால் அவர்களுக்கு ஏற்பட்ட அவதூறுகள், கற்பனை கதைகளைப் பரப்புவது போல் இனி வரும் காலங்களில் வேறு எவருக்கும் நடைபெறக் கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.
மீண்டும் ஒருமுறை தலைவர் திரு.விஷால் அவர்களின் மீது பேரன்பு கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.
அன்பை விதைப்போம்!
மனித நேயத்தை காப்போம்!!
இவரின் இந்த அறிக்கையால் இதுவரை பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி ஆக இருக்கும். இந்த அறிக்கை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.