எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு..
நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
‘நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது. ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் குரல், அடையாளம், படங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த ஏஐ வீடியோ உள்ளடக்கத்தை யூடியூப்பின் கொள்கையின்படி ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதுபோன்ற ஏஐ வீடியோக்கள் உண்மையில் சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு உதவுகின்றன.
நடிகரின் 95 படங்கள், இரண்டு தேசிய விருதுகள், லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நடிகரின் ஆளுமை தவறான நடவடிக்கைக்குப் பயன்படலாம்’ என குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் அபாயங்களை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குறிப்பாக பிரபலங்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் படங்கள், குரல், ஆளுமை பயன்படுத்தப்படும்போது, அது பெரும் ஆபத்தை உருவாக்கும். ஒருவேளை தவறான நடத்தையுடன் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இது உண்மையா அல்லது ஏஐ என்பதே சாமானியர்களுக்குப் புரிய காலமாகும்.
எனவே, நாகார்ஜுனாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரிகளை உடனடியாக நீக்க வேண்டும். அவரது பெயர், உருவம் மற்றும் குரலை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதற்கு எதிராக அவரது ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘இந்த டிஜிட்டல் உலகில் எனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி. இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞருக்கும் நன்றி’ என குறிப்பிட்டிருக்கிறார்.
