பாடகர் அரிஜித் மற்றும் அனிருத் இசை நிகழ்ச்சிகள் ரத்து; ஒத்திவைப்பு

அனிருத் இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகர் அரிஜித் சிங் ஏப்ரல் 27-ந்தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரிஜித் சிங்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழு பணமும் திருப்பித் தரப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சியை ரத்து செய்த அரிஜித் சிங்கின் முடிவுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தான் நடிகர் ஃபவாட் கான் நடித்த ‘அபிர் குலால்’ என்ற படத்தில் ‘குதாய் இஷ்க்’ என்ற பாடல்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பாடலை ஷில்பா ராவ்வுடன் இணைந்து அரிஜித் சிங் பாடியுள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தான் நடிகர் நடித்த படத்தின் இரண்டு பாடல்களும் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த பாடலை பாடியதற்காக அர்ஜித் சிங் விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், தமிழ் இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தரின் பெங்களூரு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 24 அன்று டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய தேசிய சூழலை கருத்தில் கொண்டு டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
