ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிகை வித்யாபாலன்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில் ‘ஜெயிலர்’ மிக முக்கியமான படம். அவரது மாஸ், அவரது ஸ்டைல் என அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்தி திரைக்கதை அமைத்து படமாக்கினார் நெல்சன்.
படத்தின் தரத்தையும் தலைவரின் மாஸையும் பல மடங்கு கூட்டி வைத்தார். படம் திரையரங்கில் வெற்றி வாகை சூடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதேபோல், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் ரஜினிக்கு பதிலாக ஏ.ஐ. காட்சிகளை பயன்படுத்தாமல் அவரையே நடிக்க வைத்ததும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஒர்க்-அவுட் ஆனது. மொத்தத்தில் படம் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இதன் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது. அதனால் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லாலின் மேத்யூ கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் வித்யா பாலன் இணைந்துள்ளார். அவர் மோகன்லாலின் மனைவியாக நடிக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த தகவலை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
