தனது வாழ்க்கை அனுபவம் பற்றி ராஷ்மிகா நேர்மறை பேச்சு: வைரலாகும் நிகழ்வு..
நடிகை ராஷ்மிகா மந்தனா, ஐதராபாத்தில் நடைபெற்ற ‘வி வுமன் வாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கையில்,
‘எனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களை அல்லது மனதுக்கு வேதனையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நான் பின்பற்றும் ஒரு எளிய மந்திரம் உள்ளது – ‘இந்த நாளும் கடந்து போகும்’.
இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கின்றன. எந்தக் கஷ்டமும் நிரந்தரமில்லை, காலம் எல்லாவற்றையும் சரிசெய்யும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.
ஒரு பொதுநபராக, குறிப்பாக சினிமா துறையில் தீவிரமாக இருக்கும் நடிகையாக, தனது தனிப்பட்ட வாழ்க்கையும் எப்போதும் மக்களின் கண்களுக்கு முன்னால் இருக்கும். நான் என்ன செய்தாலும், சொன்னாலும் அது பகுப்பாய்வு செய்யப்படும், விமர்சிக்கப்படும். சில நேரங்களில் தேவையற்ற ட்ரோலிங், எதிர்மறையான கருத்துகள் எதிர்கொள்ள நேரிடும். ஆரம்பத்தில், இவை எல்லாம் மனதிற்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தின.
ஆனால், காலப்போக்கில், இதுபோன்ற வெளிப்புற எதிர்மறைகள் நமது உள் அமைதியைக் கெடுக்க விடக்கூடாது என்பதை உணர்ந்தேன். நமது மனதின் கட்டுப்பாடு நம் கையில்தான் இருக்க வேண்டும்’ என தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கடினமான சமயத்தில் சுய அன்பு மற்றும் சுய பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ராஷ்மிகா வலியுறுத்தினார். “நம்மை நாமே நேசிப்பது, நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது, நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம்.
எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, நேர்மறையான மக்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் எனது அன்பான செல்லப்பிராணி ‘ஆரா’ எனக்கு பெரிய ஆதரவு. அவர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது மனதுக்கு அமைதி கிடைக்கிறது.
தினமும் நன்றியுணர்வுடன் வாழ்வது, நம்மைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். பெரிய சாதனைகளுக்காகக் காத்திருக்காமல், அன்றாட சிறிய மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டும். இது நமது மன உறுதியை அதிகரிக்கும்’ என்றார். ராஷ்மிகாவின் இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
