தங்கத்தை உரச தகுதி வேணும்: விஷ்ணு விஷாலுக்கு, டோனி ரசிகர்கள் பதிலடி
யார் யாரை விமர்சனம் செய்வது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விஷ்ணு விஷால் மீது டோனி ரசிகர்கள் பாய்ந்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே கேப்டனும் ரசிகர்களால் ‘தல’ என போற்றப்படுபவருமான டோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்து விட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால், இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும்.
எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல’ என தெரிவித்துள்ளார்.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் மோதியது தெரிந்ததே. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த முறை அணிக்கு டோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
I refrained n refrained n refrained being a cricketer myself…
I didn wanna come to conclusions too soon…But this is atrocious…
Why come so lower down the order ..
Is any sport played not to win?
Its just like visitn a circus now…
NO INDIVIDUAL IS BIGGER THAN THE…
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 11, 2025
மேலும் வழக்கமாக 6-வது வரிசையில் பேட்டிங் இறங்கும் டோனி, 9-வதாக இறங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. தோற்றுக் கொண்டிருக்கும் அணியை ஒரு கேப்டனாக அவர் முன்கூட்டியே இறங்கி காப்பாற்ற முயற்சி செய்திருக்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே விஷ்ணு விஷாலும் டோனியின் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஆட்டத்தில் 10 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சிஎஸ்கே வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டோனியின் தீவிர ரசிகர்கள் தங்கத்தை உரசிப் பார்ப்பதற்கு முன், முதலில் நீ உரைகல்லாக இருக்கப் பழகு’ என பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.