மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமானின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி “மாமன்னன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் நேற்று செலிபிரேட் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மனம் திறந்து பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “மாமன்னன் திரைப்படத்தின் கதை 20, 30 வருடமாக எனக்குள் இருந்த ஆதங்கம். என்னால் இசையில் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். படத்தில் வடிவேலுவின் ஒரு காட்சி பார்த்தேன் அப்போதே இந்த படத்தை சிறப்பாக பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக” கூறியிருக்கிறார்.