நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான சிகிச்சை காரணமாகவே சமீப காலமாக சோர்வாகத் தெரிவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“என் மீது அன்பும் அக்கறையும் காட்டி தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வரும் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவுகளின் கீழ் வந்த உங்கள் ஒவ்வொரு கருத்தையும் பார்த்தேன். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நான் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டு வருவதால், அதன் பக்கவிளைவாக சில நேரங்களில் முகத்தில் சோர்வு காணப்படலாம். ஆனால் இந்த சிகிச்சை எனது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.
இருப்பினும், ரசிகர்களின் அன்பும், நான் செய்து வரும் வேலையின் மீதான அர்ப்பணிப்பும், குறிப்பாக ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினரிடம் உள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால் உடல்நல சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறேன்.
எனது உடல்நிலை விரைவில் முழுமையாக சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் வெளிப்படுத்திய அக்கறை, என் உடல்நலத்தை இன்னும் சிறப்பாக கவனித்துக்கொள்ளும் ஊக்கத்தை வழங்கியுள்ளது.
எனக்கு ஆதரவாக நிற்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கருத்துக்கும், ஒவ்வொரு வாழ்த்துக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்தப் படத்தை உங்களிடம் கொண்டு வர காத்திருக்கிறோம்.
வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தை அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Humbly sharing this with gratitude and love 🙏#GattaKusthi2 pic.twitter.com/FCR9n782RA
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 25, 2026