ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது.
‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற சிவகார்த்திகேயன் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்துப் பேசியுள்ளார். அவர் அலுவலகத்துக்கு சிவகார்த்திகேயன் செல்லும் வீடியோ வலைதளத்தில் பரவி வருகிறது.
பிரம்மாண்ட படங்களை இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலியுடனான இந்தச் சந்திப்பை அடுத்து சிவகார்த்திகேயன் இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பு தெரிவிக்கையில், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என தெரிவிக்கிறது.
