‘அழகர் யானை’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் விளக்கம்..

‘அழகர் யானை’ பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்..
’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக, 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
’அழகர் யானை’ குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன், தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது. எல்லோருக்குமான மழையையும் காற்றையும் போல எல்லோருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் விதைப்பதே இந்தப் படம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் 169 அடி உயரத்தில் ஒரு யானை சிலை இருக்கிறது. ராஜேந்திர சோழன் வெற்றி கொண்ட பிறகு அந்த யானையை நிறுவி அதற்கு ‘அழகர் யானை’ என பெயர் வைத்தார். ஒரு சோழ மன்னன் பாண்டிய நாட்டில் பயன்படுத்தப்படும் அழகர் என்கிற பெயரை வைத்துள்ளார். அந்த மாதிரி ஒரு நம்பிக்கையை விதைக்கும் விதமாகத்தான் ‘அழகர் யானை’ என்கிற பெயரை படத்திற்கு வைத்துள்ளோம்.
எம்ஜிஆரின் ’நல்ல நேரம்’, ரஜினிகாந்தின் ’அன்னை ஓர் ஆலயம்’, கமலின் ’ராம் லட்சுமண்’ ஆகிய படங்களைப் போல யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் குழந்தைகள் நடிப்பதுடன் யானையும், குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த விஜய் டிவி புகழும் நடிப்பதால், நிச்சயம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும். நகைச்சுவை நடிகரான ஆடுகளம் முருகதாஸ், வில்லன் நடிகர் ஆர்யன் இருவருமே இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்’என்றார்.
மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் கேரளாவில் நடைபெற இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்தினை எஸ்.பி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சிவசங்கர் தயாரித்து வருகிறார்.
