சூர்யாவுடன் மீண்டும் ஏன் இணையவில்லை?: வதந்திகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி..

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இணைந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதேபோல், கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம் பூஜையுடன் கைவிடப்பட்டது.
பின்னர், சுதா கொங்கராவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படத்திலிருந்தும் விலகினார். தற்போது அந்த படத்தில் ‘பராசக்தி’ என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு முன்னணி இயக்குநர்களிடம் அவர் இணையும்போது, அந்த படத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது. அவ்வகையில் கஜினி, ஏழாம் அறிவு என இரு மிகப்பெரிய படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து பணியாற்றவில்லை. இதற்கு என்ன காரணம்? என்றதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
‘சூர்யா ஒரு திறமையான நடிகர், கடுமையான உழைப்பாளி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு, என் ரூட்டும் சூர்யாவின் ரூட்டும் வேறு விதமாக போய்விட்டது. ‘துப்பாக்கி’ கதை ரெடி செய்த பிறகு நான் வேறு பாதையில் பயணிக்க துவங்கிவிட்டேன். அதைப்போல சூர்யாவும் வேறு பாதையில் சென்றுவிட்டார். அதனால் தான் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவில்லை.
இதில், வேறு எந்த விருப்பு வெறுப்பும் தனிப்பட்ட முறையில் இல்லை. சரியான கதையும் சூழலும் உருவாகாததன் காரணமாக நாங்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை’ என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது ‘சிக்கந்தர்’ படத்தை தொடர்ந்து, இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி, வெங்கி அட்லூரி, ஜீத்து மாதவன் என இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து பணியாற்றி வருகின்றார்.
