தன் மீதான கடும் விமர்சனத்திற்கு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனித்த முத்திரை பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படக் குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.
இதனிடையே, தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது என்பது ‘மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய பலம். ஏனென்றால், தினமும் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதைக் காட்சிகளில் வைக்கும்போது மக்களிடையே ஓர் இணைப்பு இருக்கும்.
வேறு மொழியில் படம் பண்ணும்போது, அன்று என்ன நடக்கிறது, ரசிகர்கள் என்ன ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. வெறும் கதை, திரைக்கதையை நம்பி மட்டுமே படம் பண்ண வேண்டும். அப்படி பார்க்கும்போது தமிழ் தான் முழு பலம். தெலுங்கும் ஓகே தான். ஏனென்றால், தெலுங்கு நமது மொழி மாதிரி கிட்டதட்ட இருக்கும் என்பதால் பிடித்துவிடலாம்.
இந்தி எல்லாம் ஒன்றுமே தெரியாது. ஏனென்றால், தமிழில் எழுதுவோம். அதை ஆங்கிலத்தில் மாற்றி பின்பு இந்தியில் மாற்றி திரையில் வரும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாமே தவிர, சரியாக என்ன பேசுகிறார்கள் என்பதை உணர முடியாது.
மொழி தெரியாத ஊரில் படம் பண்ணும்போது, நாம் மாற்றுத்திறனாளி போல்தான் உணர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தமிழில் முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
