சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கிடைக்கும் விதமாக, இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தை அக்ஷய் குமார் ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில், சண்டை பயிற்சியாளரான ஸ்டண்ட் சில்வா, இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷன் வாயிலாக நிறைய கஷ்டப்படுற மாணவர்களுக்கு நடிகர் சூர்யா உதவி செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கடந்து பத்து ஆண்டுகளாக இன்சூரன்ஸ் தொகை செலுத்தி வருகிறார் சூர்யா. இவ்வாறு ஒத்துழைப்பு தருவதில் அவர் முதல் இடத்தில் இருக்கிறார். அதனைப் பார்த்து வியந்துபோனேன்.
வருஷம் பத்து லட்சம் கட்டுவார். இதுகுறித்து வெளிப்படையாக அவர் எங்கும் சொன்னதில்லை. சூர்யா சார் இதனை ஆரம்பித்த பிறகு பல கம்பெனிகளிலும், தயாரிப்பாளர்களும் இதனை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்’ என பேசியுள்ளார்.
இதனிடையில், வரும் 23-ந்தேதி தனது 50-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் சூர்யா. இதனை முன்னிட்டு அவரின் ‘கருப்பு’ பட அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
