தனுஷ் கொடுத்த நம்பிக்கையால், எனது தயக்கம் குழப்பம் நீங்கியது: நித்யா மேனன் வாய்ஸ்..

ஊக்கப்படுத்த ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்பது போல, தனுஷ் குறித்து நித்யா மேனன் கூறிய விஷயத்தை பார்ப்போம்..
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார். இப்படத்தில், நித்யா மேனன் நாயகியாக நடிக்கின்றார்.
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இட்லி கடை படத்தின் மூலம் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில், படத்தை பற்றி நித்யா மேனன்,
‘இட்லி கடை படத்தில் என்னுடைய ரோல் வித்தியாசமான ஒரு ரோலாக இருக்கும். காமெடி கலந்த கதாபாத்திரமாக இருக்கும். முதலில் அந்த கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடிக்க முடியுமா என தயங்கினேன். நிறைய குழப்பங்கள் இருந்தது.
ஆனால், தனுஷ் தான் என்னால் அந்த கதாபாத்திரத்தை பண்ண முடியும் என நம்பினார். அவர் கொடுத்த நம்பிக்கையால் தான் என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது. கண்டிப்பாக இட்லி கடை திரைப்படத்தில் என்னுடைய ரோல் வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.
இந்நிலையில், தனுஷ் மற்றும் நித்யா மேனன் உட்பட இப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகின்றார்.
அருண் விஜய் இப்படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தெரிகின்றது. முன்னதாக, அருண் விஜய் நடித்த பொங்கல் வெளியீடாக வரும் ‘வணங்கான்’ படத்திற்காக அவருக்கு விருது கிடைக்கும் என கூறப்படும் நிலையில், இட்லி கடை படத்தின் நெகடிவ் ரோல் அவரை மீண்டும் டம்மியாக்கி விடாதா எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இட்லி கடை படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இப்படம், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி ரிலீசாகிறது.
எப்படியோ.. எத்தனை உணவு வந்தாலும், இட்லியை அடிக்க முடியுமா? பார்க்கலாம் ருசி எப்டின்னு.!
