‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்தை தொடர்ந்து ‘வாயுபுத்ரா’..
ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமாக ‘வாயுபுத்ரா’ உருவாகிறது. 3டி-யில் உருவாகும் இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குகிறார்.
மலைகளையே நகர்த்திய ஹனுமனின் வலிமை, ராமபிரான் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி, நம்பிக்கை, தியாகம் ஆகியவை இந்தப் படத்தில் இடம் பெறுகின்றன.
இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம், வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் சங்கமிக்கும் அபூர்வமான அனுபவத்தைத் தரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர் நாக வம்சி கூறும்போது, ‘இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், 2 ஆண்டுகளாக இந்தக் கதைக்கு உழைத்து வருகிறோம். சந்து மொண்டேட்டியின் சிந்தனை, வடிவம் பெறுகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 2026-ம் ஆண்டு தசராவுக்கு இப்படம் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையைச் சொன்ன ‘மகாவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியாகி வசூல் அள்ளியது. இதையடுத்து அனிமேஷனில் பக்தி படங்களை எடுப்பது அதிகரித்து வருகிறது.

vayuputra the story to be made into a 3d animation
