ஏழு நாளில் வாரிசு 210 கோடி வசூல் எல்லாம் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் வாரிசு. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இருந்த போதிலும் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்த படம் ஏழு நாளில் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி ஒன்றை வாரிசு வசூல் 210 கோடி என்பது உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். லலித் குமார் வாங்கியது தமிழக ரிலீஸ் உரிமை மட்டும் தான் அதிலும் முக்கிய சில இடங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி விட்டது.
மேலும் ஓவர் சீஸ் உரிமையை வேறு நிறுவனம் பெற்றது. இதனால் உலகளாவிய வசூல் லலித் குமார் எப்படி தெரியும்? அது மட்டுமல்லாமல் படத்தின் வசூல் என்ன என்பது முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். மேலும் வாரிசு படம் தனியாக ரிலீஸ் ஆகவில்லை, போட்டியாக வெளியான துணிவு திரைப்படமும் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் வாரிசு 210 கோடி வசூல் என்பது 200% வாய்ப்பில்லாத ஒன்று என கூறுகிறார்.
ஒருவேளை விஜயின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் என்பதால் அவர் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கலாம் இது வியாபார யுத்தி என தெரிவித்துள்ளார். திருப்பூர் சுப்ரமணியன் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது.